சாவித்திரிக்காக கொடைக்கானலில் பங்களா வாங்கினோம் - ஜெமினி கணேசன்

அந்த அழகான பெண் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நானும் சாவித்திரியும் ஆலோசித்தோம்.;

Update:2025-06-03 00:00 IST
Click the Play button to listen to article

(02-08-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

குழந்தை அழகாகவும், நிறமாகவும் இருக்கக் கேட்பாளேன்!

அந்த அழகான பெண் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நானும் சாவித்திரியும் ஆலோசித்தோம். எங்கள் குல தெய்வம்-அங்காளம்மன். காளி, சாமுண்டீசுவரி என்று பல பெயர்களால் அழைக்கப்படுவாள்.

குழந்தைக்கு மூன்று மாதம் ஆனதும், எனது "டாட்ஜ்" காரில் நர்சுகள், அம்மாமார் துணையோடு, மைசூருக்கு அழைத்துச் சென்றோம். நான்தான் டிரைவர். மைசூர் சாமுண்டி மலை உச்சியில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் முன்னிலையில் குழந்தைக்கு சாமுண்டீஸ்வரி என்று பெயரிட்டு அழைத்தோம். குழந்தை சாமுண்டீஸ்வரி, எங்கள் இன்ப வாழ்க்கையில் மேலும் இன்பத்தை சேர்த்தாள்!

சாவித்திரி, நாலைந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டாள்.


மகளுக்கு சாமுண்டீஸ்வரி என்று பெயரிட்டு மகிழ்ந்த ஜெமினி கணேசன்-சாவித்திரி

சாவித்திரிக்கு கொடைக்கானல் பிடித்துவிட்டது!

எனக்குப் பிடித்த மலைப்பிரதேசம், கொடைக்கானல். 1941-ல் நான் முதன் முதலாக கொடைக்கானலுக்குப் போனதில் இருந்து எனக்கு அங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை!

"மணமாலை" என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள, 1957 ஜனவரியில் நானும் சாவித்திரியும் கொடைக்கானலுக்கு சென்றோம். நல்ல குளிர், ஏரியில் படகில் இருவருக்கும் ஒரு "டூயட் பட்டு"! அதில் இருந்து சாவித்திரிக்கும், கொடைக்கானல் நிரம்பப் பிடித்துவிட்டது.

நானும் சாவித்திரியும், "பாசமலர்", "பார்த்தால் பசிதீரும்" படத்துக்காக கொடைக்கானலுக்கு போனபோது, "ரெட்லிஞ்சு" என்ற அழகான பங்களாவை நான் வாங்கினேன். ஆனால், கிரகப்பிரவேசத்துக்கு என்னால் இருக்க முடியவில்லை. "தேன் நிலவு" படப்பிடிப்பில் கலந்துகொள்ள நானும் என் மனைவி பாப்ஜியும் ஸ்ரீதர் குழுவினரோடு காஷ்மீருக்கு சென்றுவிட்டோம். அதனால் சாவித்திரியும், நண்பர்களும்தான் கொடைக்கானல் பங்களாவுக்கு புதுமனை புகுவிழா நடத்தினார்கள். நாளடைவில், சாவித்திரிக்கும் கொடைக்கானலில் ஒரு வீடு வாங்க திட்டமிட்டேன்.


முதல் மனைவி பாப்ஜி மற்றும் மகள்களுடன் ஜெமினி கணேசன் காஷ்மீருக்கு சென்றிருந்தபோது...    

ஆனந்தம்

ஒருநாள், நியூடோள் ஸ்டூடியோ பங்காளியும், பிரபல கேமராமேனுமான ஜிதன் பானர்ஜி என்னைக்காண வந்தார்.

"ஜெமினி! எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா? நீ கொடைக்கானலில் பங்களா வாங்கியதாகக் கேள்விப்பட்டேன். என்னுடைய "மீனா பாணி" பங்களாவை உனக்கு விற்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால், நான் தாமதமாக வந்துவிட்டேன். என் பங்களாவையும் நீயே வாங்கிக்கொள்ளேன். எனக்கு உபகாரம் செய்தது போல இருக்கும்" என்றார், பானர்ஜி.

எனக்கு அந்தப் பங்களாவைப் பற்றித் தெரியும். என் மாமா ராமச்சந்திரர் (எஸ். எஸ். வாசன் அவர்களின் மாமனார்) அந்த பங்களாவின் சூப்பர்வைசராக இருந்து கட்டினார்கள். செட்டிநாட்டு கட்டிடம் மாதிரி அதுவும் நல்ல கெட்டியான பங்களா!

"என்ன விலைக்குக் கொடுப்பீர்கள்?" என்று பானர்ஜியைக் கேட்டேன்.

"எல்லோரும் மிகவும் குறைவாகக் கேட்கிறார்கள், எனக்கு நீ இவ்வளவு கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்று ஒரு தொகையைச் சொன்னார்.


கொடைக்கானலில் தனித்தனி பங்களா வாங்கிய ஜெமினி-சாவித்திரி 

"சரி, நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். பானர்ஜிக்கு நிரம்ப மகிழ்ச்சி.

நானும் சாவித்திரியும், பணத்தை தயார் செய்துவிட்டு, பானர்ஜியை சந்தித்தோம். மொத்த பணத்தையும் கொடுத்து, "எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள், குறைவாக இருந்தால் சொல்லுங்கள்" என்று சொன்னோம்.

பானர்ஜி, பணத்தை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துவிட்டு விழித்தார். "என்னப்பா, ஜெமினி! முன் பணமாகக் கொடுத்த ரூ. 5 ஆயிரத்தை கழிக்காமல், சேர்த்து கொடுத்து இருக்கிறாயே!" என்று வியப்போடு சொன்னார்.

"எங்கள் மகிழ்ச்சிக்காக அதையும் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை மனம் நிறைந்து வாழ்த்துங்கள்" என்றோம். கண்களில் நீர் மல்க, எங்களை ஆசீர்வதித்தார். பானர்ஜி.

(தொடரும்)

Tags:    

மேலும் செய்திகள்