எனக்கும் சாவித்திரிக்கும் முத்தப்போட்டி நடந்தது - ஜெமினி கணேசன்
நானும் சாவித்திரியும் செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்தோம்.;
(28.03.1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
நானும் சாவித்திரியும், செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்தோம்! அதுபோல தயாரிப்பாளர்களுக்கும், சக நடிகர் -நடிகைகளுக்கும், ரசிகர்களுக்கும் எங்கள் பேரில் உண்மையான பாச உணர்ச்சி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
நாங்கள் தொழிலில் ஆர்வமாக இருந்தோமே தவிர, எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு அப்போது புலப்படவே இல்லை. நாங்கள் நடிக்க ஒப்புக் கொண்ட படங்களைவிட, வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிய படங்களின் எண்ணிக்கை பலமடங்கு இருக்கும். கண்டதெல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல் போல, வந்த படங்களை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆண்டுக்கு நான்கைந்து நல்ல படங்கள் இருந்தால் போதும் என்று நடித்து வந்தோம். சில நல்ல படங்களை ஒதுக்கித் தள்ளிய நேரமும் உண்டு!
காலஞ்சென்ற ஒரு முருகபக்த தயாரிப்பாளர், கையில் இலட்ச ரூபாயை வைத்துக்கொண்டு, என் வீட்டிற்கு நடையாக நடந்தார். "தம்பி! பணத்தை வாங்கிக்கொள்! வலியவரும் லட்சுமியை உதைத்துத் தள்ளாதே!'' என்று எனக்கு அறிவுரையும் சொன்னார். நான் பணத்தை வாங்கவே இல்லை. காரணம் அந்த தயாரிப்பாளர் தனது அடுத்த படத்துக்கு முதலில் சாவித்திரியை ஒப்பந்தம் செய்து இருந்தார். பிறகு, சாவித்திரியை நீக்கி விட்டு, வேறு நடிகையைப் போட்டுவிட்டார்! இதுதான் என் வருத்தம்.
ஜெமினி கணேசன் - சாவித்திரி
அடிமேல் அடி
நான் பணம் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருந்திருந்தால், யாராக இருந்தால் என்ன, கூலிக்கு கட்டியணைக்க வேண்டியதுதானே என்று, பணத்தை வாங்கிப்போட்டு இருப்பேன்!. ஆனால், சாவித்திரி எதாவது நினைத்துக் கொள்ளுவாள் என்று, தயாரிப்பாளர்களிடம் சாக்குப்போக்குச் சொன்னேன்.
"இந்த படத்துக்கு நீங்கள் வேறு நடிகரை போட்டுக்கொள்ளுங்கள். நான் அடுத்த படத்தில் நடிக்கிறேன்" என்று சொல்லி, அவரை அனுப்பி வைத்தேன். நான் தட்டிக்கழித்த படம், வேறு ஒரு நடிகருக்கு வெற்றிக்கொடி கட்டியது. அன்றில் இருந்து பிடித்தது சனி! எனக்கு நல்ல படங்கள் வந்தாலும் "ரேட்" உயரவில்லை. இந்த நேரத்தில் இன்னோர் அடியும் விழுந்தது!! சாவித்திரிக்கு உடல் சற்று கனத்துவிட்டதால், பட வாய்ப்பு குறையத் தொடங்கியது.
முத்தத்துக்குப் போட்டி!
இதற்கு இடையே நாங்கள், அனைத்து நாட்டு திரைப்பட விழாவில் கலந்துகொள்ள, இந்தோனேசியா, சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றோம். சிங்கப்பூர் விமான நிலையத்தில் எள்ளு போட்டால் எள்ளு விழாது. அவ்வளவு ரசிகர் கூட்டம்!. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில், நானும் சாவித்திரியும் நடித்த “மிஸ்ஸியம்மா" படத்தைத் திரையிட்டார்கள். எங்கள் நடிப்பு இந்தோனேசிய மக்களுக்கு நிரம்ப பிடித்துவிட்டது. பெண்கள் கூட்டம் கூட்டமாக எங்களைப் பாராட்ட வந்தார்கள். பாராட்டுக்கு அறிகுறியாக எங்களை முத்தமிட போட்டி போட்டார்கள். எனக்கு கஷ்டமாகிவிட்டது.
அருகே இருந்த தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன், "பிரதர், தைரியமாக வாங்கிக்கொள்ளுங்கள். இந்தோனேசிய மக்கள் தங்கள் மகிழ்ச்சியை முத்தம் மூலமாகத்தான் தெரிவிப்பார்கள். ம்... உமக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம். என்னை சீண்டுவார் யாரும் இல்லை” என்று விளையாட்டாகக் குறை பட்டுக்கொண்டார் சதீஷ்.
மகன் சதீஷுடன் சாவித்திரி & ஜெமினிகணேசன்
நித்தமும் மகிழ்ச்சியாக எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.1965-ல் எங்களுக்கு சதீஷ்குமார் பிறந்தான். சாவித்திரி இரண்டாவது குழந்தைக்கு தாயானதும், அவளுக்கு சினிமா வாய்ப்புகள் மேலும் குறையத் தொடங்கின. இந்த குறைவு, திறமை குறைவினால் அல்ல; உடல் சரியாக இல்லாததினால்!
அதற்காக அவள் வருத்தப்படவில்லை. "நடித்தது போதும், விடுங்க. இருக்கிற வசதி உட்கார்ந்து சாப்பிட்டால்கூட ஒரு தலைமுறைக்கு குறைவு இருக்காது. இனிமேலும் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை" என்று அவள் அடிக்கடி கூறிக்கொண்டு இருந்தாள்.
நடிகையர் திலகம்
அந்த நேரத்தில், சாவித்திரிக்கு, "நடிகையர் திலகம்" என்ற பட்டம் அளிக்கப்பட்டது. சீனிவாச காந்தி நிலையத்தார் இந்தப் பட்டத்தை வழங்கினார்கள். அதில் சாவித்திரிக்கு பெரும் மகிழ்ச்சி. கலைஞர்கள் என்றாலே பட்டம், புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள்தானே!. அப்போது, நான் சாவித்திரிக்குச் சொன்னேன். "சாவித்திரி! பட்டம் சோறு போடாது. பறந்துவிடும். நாம் உஷாராக இல்லாவிட்டால், நம்மையே பறக்கடித்து விடும். இனிமேல்தான் நீ மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். எப்பாடுபட்டாவது உடல் கனத்தைக் குறைத்துக்கொள். நல்ல வேடங்களை ஏற்று நடி. நீ சம்பாதித்ததும், சினிமாவில் சாதித்ததும் போதாது. இன்னும் நிறைய சாதனைகள் புரிய வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்" என்று எல்லாம் நான் மன்றாடியது செவிடி காதில் ஊதிய சங்கு ஆயிற்று!
"நடிகையர் திலகம்" பட்டம் பெற்ற சாவித்திரி
டைரைக்டரான சாவித்திரி
அப்போது சில ஆந்திரப் பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டார்கள். அந்தப் படத்தை சாவித்திரி டைரக்டு செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். பலமுறை சாவித்திரியைச் சந்தித்து டைரக்டு செய்யும்படி விரும்பி கேட்டுக் கொண்டார்கள். சாவித்திரி என்னிடம் வந்து, "என்னங்க! என்னை டைரக்டு பண்ணச் சொல்கிறார்கள். எனக்கு டைரக்ஷனைப் பற்றி என்ன தெரியும்! பேசாமல் "மாட்டேன்" என்று சொல்லிவிடப் போகிறேன்" என்று சொன்னாள்.
''அடி அசடே! டைரக்ஷனைப் பற்றி உன்னைவிட அதிகம் தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? தற்போது நீ பொழுது போகாமல் தவிக்கிறாய். நல்ல ஓர் எடிட்டரை துணைக்கு வைத்துக்கொண்டு, அனுபவமுள்ள உதவியாளர்களையும் சேர்த்துக்கொண்டு, தைரியமாக டைரக்ஷன் துறையில் இறங்கு'' என்று நான் உற்சாகப்படுத்தினேன்.
1967-ம் ஆண்டு, "சின்னுரி பாப்பலு" (குழந்தை உள்ளம்) என்ற தெலுங்குப் படத்தின் டைரக்டர் ஆனாள், சாவித்திரி. ஆனால், அதுவே அவளது வீழ்ச்சிக்கு ஒரு வித்தாகும் என்று அப்போது நான் எண்ணவில்லை.
(தொடரும்)