கங்கை நதிக்கரையில் காலத்தால் அழியாத கலாச்சார பொக்கிஷம் பாட்னா!
பாட்னா, ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மற்றும் செழுமையான கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட ஒரு அற்புதமான நகரமாகும்.;
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாட்னா, ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மற்றும் செழுமையான கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட ஒரு அற்புதமான நகரமாகும். உலகப் புகழ்பெற்ற லிட்டி சோகாவுக்கு பெயர் பெற்ற பாட்னா, உணவு மட்டுமல்லாமல், அதன் பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் வரலாற்றுப் பொக்கிஷங்களாலும் தனித்துவம் பெற்று விளங்குகிறது. ஒரு காலத்தில் மகதப் பேரரசின் தலைநகராக விளங்கிய இந்நகரம், புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின் வாழ்வுடன் தொடர்புடைய பல இடங்களை கொண்டுள்ளது. இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த பாட்னா நகரின் வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகம், சுற்றுலா மற்றும் உணவுமுறை குறித்த விரிவான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
வரலாறும் கலாச்சாரமும்
இந்தியாவின் கிழக்குப் பகுதியில், புனிதமான கங்கை நதியின் தென் கரையில் கம்பீரமாக வீற்றிருக்கிறது பாட்னா. பீகாரின் மிகப்பெரிய நகரமாகவும், கொல்கத்தாவிற்கு பிறகு கிழக்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கும் இந்த பாட்னா, ஒரு செழிப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. பண்டைய காலத்தில் மௌரியப் பேரரசின் தலைநகராக விளங்கிய இந்த நகரம், பாடலிபுத்ரா, குசும்பூர், அசிமாபாத் போன்ற பல பெயர்களில் அறியப்பட்டு, தற்போது பாட்னா என்று அழைக்கப்படுகிறது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கிராமமாக இருந்து, பாட்டில் மரங்களின் செழிப்பால் பாட்டிலிகிராம் என்று பெயர் பெற்ற இந்நகரம், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளதாலும், ஒரு தலைநகராக இருப்பதாலும் இதன் வணிக முக்கியத்துவம் எக்காலத்திலும் குறைவின்றி நிலைத்திருந்தது. குறிப்பாக கங்கையின் அகலமான படித்துறைகள் வழியாக பெரிய கப்பல்களில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, ஒரு முக்கிய துறைமுக நகரமாகத் திகழ்ந்ததால், 'பதன்' என்று அழைக்கப்பட்டு, பின்னர் 'பாட்னா' என மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
கங்கையின் அகலமான படித்துறை மற்றும் பாட்னாவின் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்
குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு, பிரிட்டிஷ் ஆட்சி எனப் பல்வேறு வம்சங்களாலும், பேரரசுகளாலும் ஆளப்பட்டு, இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள இந்த பாட்னா வெறும் ஒரு நகரம் மட்டுமல்ல, அது ஞானத்தின் பிறப்பிடம் என்றே சொல்லலாம். காரணம் காளிதாசர், சாணக்கியர், ஆர்யபட்டர் போன்ற மகத்தான அறிஞர்களின் பிறப்பிடமாகவும், புகழ்பெற்ற இடமாகவும் பாட்னா திகழ்கிறது. இன்றும், நாட்டின் மிக உயர்ந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பீகார், குறிப்பாக பாட்னாவை சேர்ந்தவர்கள் என்பது இந்த நகரத்தின் கல்வி திறனுக்கும், அறிவுசார் வளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். கல்வியின் தலைநகரம் என்றும் அழைக்கப்படும் பாட்னாவில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) மற்றும் பாட்னா பல்கலைக்கழகம் போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இருப்பினும் பாட்னா மக்களின் வாழ்க்கை முறை எப்போதும் மிகவும் எளிமையானது. அதேவேளை இவர்களின் சமூக விழிப்புணர்வு மிகவும் உயர்ந்தது. இந்திய சுதந்திர போராட்டத்திலும் பாட்னாவின் பங்களிப்பு அளப்பரியது. சம்பாரண் இயக்கம் (நீலச் சாகுபடிக்கு எதிராக) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவை பாட்னாவில் இருந்துதான் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத் தலங்கள்
பாட்னாவில் உள்ள ஒவ்வொரு சுற்றுலாத் தலமும், கடந்த காலத்தின் ஓர் அழகிய நினைவுகளை நமக்கு விவரிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தானியக் கிடங்காக கட்டப்பட்ட கோல்கர், அதன் உச்சியில் இருந்து பாட்னாவின் பரந்த காட்சியையும், புனித கங்கை நதியின் எழில் மிகு தோற்றத்தையும் நமக்கு வழங்குகிறது. ஒரு காலத்தில் உணவு பற்றாக்குறைக்கு தீர்வாக அமைந்த இந்தக் கட்டிடம், இன்று பாட்னாவின் அடையாளங்களுள் ஒன்றாக கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. அதேபோல் பாட்னாவில் இருந்து ஹாஜிப்பூர் வரை விரிந்து பறந்து நிற்கும் மகாத்மா காந்தி சேது, உலகின் மிக நீளமான சாலைப் பாலங்களுள் ஒன்று. கங்கையின் மீதான அதன் பயணம், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைப்பதோடு, இந்தப் பாலத்தின் வழிச் செல்லும் ஒவ்வொரு நிமிடமும், கங்கையின் பிரம்மாண்டத்தையும், பாட்னாவின் நவீன வளர்ச்சியையும் ஒருங்கே அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குதூகளிக்கும் வண்ணம் அமைந்துள்ள சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா பாட்னாவின் பசுமையான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் அழகான தாவர வகைகளை கண்டு ரசிக்கலாம்.
உலகின் மிக நீளமான மகாத்மா காந்தி சேது பாலம் மற்றும் புத்தர் நினைவுப் பூங்கா
பாட்னாவின் ஆன்மிக மற்றும் கலாச்சாரப் பயணம் குறித்து பேசும்போது, புத்தர் நினைவுப் பூங்காவில் அது உச்சத்தை அடைகிறது. இந்த அழகிய பூங்கா, புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை வைத்துள்ள மகாபோதி மண்டபத்தைக் கொண்டுள்ளது. அமைதியையும், தியானத்தையும் நாடுபவர்களுக்கு இது ஒரு புகலிடம் என்றே சொல்லலாம். புத்தரின் போதனைகள் இன்றும் எதிரொலிக்கும் இந்தப் பூங்காவில், ஒரு சில நிமிடங்கள் செலவிடுவது மனதிற்கு ஆழ்ந்த அமைதியை தந்து மகிழ்ச்சியையும் கொடுக்கும். இதுபோலவே 1917 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்ட பாட்னா அருங்காட்சியகம், பல அரிய கலைப்பொருட்கள், சிற்பங்கள், நாணயங்கள், ஓவியங்கள் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் கருவூலமாகத் திகழ்கிறது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். பண்டைய கால இந்தியாவின் கலாச்சாரத்தையும், கலை செழுமையையும் பிரதிபலிக்கும் இந்த இடம் பாட்னாவின் கலை பொக்கிஷம் என்றே சொல்லாம்.
சீக்கியர்களின் ஐந்து ஆலயங்களில் ஒன்றான தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி
மேலும் சீக்கியர்களின் ஐந்து ஆலயங்களில் ஒன்றான தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி, சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் பிறந்த புனித பூமியாகும். இங்குள்ள குருத்வாரா, அதன் அமைதியான சூழல் காரணமாக பக்தர்களை ஈர்க்கிறது. சீக்கிய மதத்தின் ஆழமான தத்துவங்களையும், குருமார்களின் தியாகங்களையும் இங்கு உங்களால் நிச்சயம் உணர முடியும். இது தவிர மும்பையின் மரைன் டிரைவ் போல், பாட்னாவில் உள்ள மரைன் டிரைவ் மாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் நகரின் பொலிவை மேலும் கூட்டுகிறது. நகரின் புதிய அடையாளமாக உருவாகிவரும் இந்த இடம், உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. கங்கை நதியின் குளிர்ந்த தென்றலுடன், நகரில் மின்னும் ஒளிகளை ரசிப்பது இங்கு ஒரு தனி அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.
பாட்னாவின் உணவு
பாட்னா என்றதுமே நம் நினைவுக்குவரும் முதல் உணவு, அசைக்க முடியாத பெருமையுடன் திகழும் லிட்டி சோக்காதான். இந்த சுவையான உணவு இந்தியாவின் அடையாளமாகவே மாறிவிட்டது எனலாம். சுட்ட கோதுமை உருண்டைகளை, வறுத்த சத்து மாவு மற்றும் நறுமணமிக்க மசாலாப் பொருட்களுடன் கலந்து தயாரிக்கப்படும் லிட்டி, வறுக்கப்பட்ட கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சோக்காவின் துணை கொண்டு உண்ணும்போது தனித்துவமான சுவையை அள்ளி வழங்குகிறது. இது வெறும் ஒரு உணவு மட்டுமல்ல, பாட்னாவின் உணவுக் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களில் ஒன்றாக கருதப்பட்டு, நகரத்தின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஒவ்வொரு தெருமுனையிலும், சிறிய கடைகளிலும், பெரிய உணவகங்களிலும் லிட்டி சோக்காவின் மணம் எங்கும் வீசி, உணவுப் பிரியர்களை கவர்ந்திழுக்கிறது. இதன் எளிமையான செய்முறையும், அதேசமயம் வாய்க்கு எட்டிய சுவையும், பாட்னாவின் பாரம்பரியத்தையும், விருந்தோம்பலையும் பறைசாற்றுகின்றன.
பாட்னா உணவுகளான 'மால்புவா' எனப்படும் பான் கேக் மற்றும் சத்து பராத்தா
இப்படி லிட்டி சோக்கா தவிர, காலை உணவுப் பிரியர்களின் விருப்பத் தேர்வான 'சத்து பராத்தா' முதல், பல்வேறு நிரப்பிகளுடன் கிடைக்கும் சுவையான சமோசாக்கள் வரை, பாட்னாவில் சிற்றுண்டி வகைகளுக்கு பஞ்சமில்லை. இனிப்புப் பிரியர்களுக்காக 'மால்புவா' எனப்படும் பான் கேக் போன்ற இனிப்பு, சர்க்கரை பாகில் ஊறவைக்கப்பட்டுப் பரிமாறப்படுகிறது. மேலும், புத்துணர்ச்சியூட்டும் 'தஹி வடா', அடுக்கு அடுக்காகத் தயாரிக்கப்படும் 'கஜ்ஜா' மற்றும் குளிர்காலத்தில் எள்ளு, வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் 'தில்குட்' என பலவிதமான இனிப்பு வகைகளும் பாட்னாவில் மிக பிரபலம். இது தவிர தெருவோர உணவுக் கடைகளில் கிடைக்கும் சாட்டுகள், பகோடாக்கள், சூப்கள் மற்றும் ஜிலேபிகள் போன்ற இனிப்புப் பண்டங்கள் பாட்னாவின் பல்வேறு சுவை அனுபவங்களை உங்களுக்கு கொடுக்கிறது. மொத்தத்தில், பாட்னா ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் வளமான வரலாற்றையும், கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும், சுவையையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான நகரமாகும். இப்படிப்பட்ட பல அனுபவங்களை அள்ளித்தரும் இந்த நகரத்திற்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்களேன்!