இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம்! காற்றாடிக்கு பெயர்போன ஊர்! எந்த ஊர்?

குஜராத்தின் இதயம் என்று போற்றப்படும் அகமதாபாத், வரலாறு, கலாச்சாரம், மற்றும் நவீனத்துவத்தின் ஒரு அரிய கலவையாகும்.;

Update:2025-06-10 00:00 IST
Click the Play button to listen to article

குஜராத்தின் இதயம் என்று போற்றப்படும் அகமதாபாத், வரலாறு, கலாச்சாரம், மற்றும் நவீனத்துவத்தின் ஒரு அரிய கலவையாகும். இந்தியாவின் முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத், அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு புதிய கதையையும், அனுபவத்தையும் தந்து நமக்கு ஆச்சரியப்படுத்துகிறது. பழமையான படிக்கிணறுகள் முதல் கம்பீரமான கோயில்கள்வரை, அமைதியான ஆசிரமங்கள் முதல் பரபரப்பான சந்தைகள்வரை என இந்த நகரம் உங்களை ஒரு மறக்க முடியாத பயணத்திற்கு அழைத்துச் செல்லும் இடமாகும் .இப்படி பல பெருமைகள் கொண்ட அகமதாபாத் குறித்த சில சுவாரஸ்யமான மற்றும் அறியப்படாத தகவல்களை இங்கே காணலாம்.

கலாச்சாரமும் நல்லிணக்கமும் செழித்த நகரம்

அகமதாபாத், பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு நகரம். 15ஆம் நூற்றாண்டில் சுல்தான் அகமது ஷாவால் நிறுவப்பட்ட இது, முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் பிரிட்டிஷார் எனப் பல ஆட்சிக்காலங்களில் செழித்து வளர்ந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டமும் நகரத்தின் கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் தங்களின் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன. இதன் விளைவாக, அகமதாபாத் இன்று ஒரு பன்முக கலாச்சார மையமாகத் திகழ்கிறது. குஜராத்தின் பாரம்பரிய நடனங்களான கர்பா மற்றும் தாண்டியா இங்கு மிகவும் பிரபலமானவை. பொதுவாகவே அகமதாபாத் மக்கள் எந்த ஒரு பண்டிகையையும் குழுவாக ஒன்றிணைந்து கொண்டாடும் பழக்கம் உடையவர்கள். தீபாவளி, ஹோலி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் மட்டுமல்லாமல், ஜனவரி மாதத்தில் இங்கு நடைபெறும் உத்ராயன் சர்வதேச பட்டம் திருவிழா ஒரு ஆச்சரியமான காட்சியைக் கண்முன் நிறுத்தும். வானத்தையே வண்ணமயமான பட்டங்களின் ஓவியமாக மாற்றும் இந்தத் திருவிழா, குஜராத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும், மக்களின் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நிகழ்வாகும். ஆயிரக்கணக்கான வண்ணப் பட்டங்கள் வானில் தவழ, அவை ஒன்றை ஒன்று மோதி, ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் போட்டி, கண்கொள்ளாக் காட்சியாகும். இரவு நேரங்களில் 'துக்கல்ஸ்' எனப்படும் விளக்குகள் ஏற்றப்பட்ட பட்டங்கள் வானில் மிதந்து, ஒரு மாயாஜால சூழ்நிலையை உருவாக்கும்.


சர்வதேச உத்ராயன் பட்டம் திருவிழா மற்றும் கர்பா நடனம்

அதேபோல் நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் அகமதாபாத் நகரம் முழுவதும் தாண்டியா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். பாரம்பரிய இசைக்கு ஏற்ப, வண்ணமயமான ஆடைகள் அணிந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கைகளில் தாண்டியாக் குச்சிகளை ஏந்தி, வட்டமாகச் சுற்றி வந்து ஆடுவது கண்கவர் காட்சியாகும். இந்த நடனம் ஒரு சமூக ஒன்றிணைவாகவும், கொண்டாட்ட மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. நகரத்தின் பல பகுதிகளில் பெரிய அளவிலான தாண்டியா மைதானங்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விடிய விடிய ஆடுவார்கள். மேலும், இந்த நகரத்தின் கைவினைப் பொருட்கள், குறிப்பாக நெசவு மற்றும் அச்சுப் பணிகள், அவற்றின் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்காக உலகப் புகழ் பெற்றவை. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள், அவற்றின் மென்மைக்கும், வண்ணங்களின் கலவைக்கும், பாரம்பரிய உருவமைப்புகளுக்கும் பெயர் பெற்றவை. குறிப்பாக, இந்த நகரத்தின் நெசவாளர்கள் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் பாரம்பரிய நுட்பங்கள், ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு தனித்துவமான அழகையும், நேர்த்தியையும் அளிக்கின்றன.

பழமையும் புதுமையும் சங்கமிக்கும் ஒரு பயணம்

அகமதாபாத், குஜராத்தின் கலாச்சார மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைநகரமாகும். இங்கு பழங்கால கட்டிடக் கலையின் பிரம்மாண்டமும், நவீன நகரத்தின் துடிப்பான வாழ்வும் இணைந்து பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றது. இதில் குறிப்பாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்த காந்தியடிகளின் அமைதியான நினைவிடமான சபர்மதி ஆசிரமம், அமைதி மற்றும் அகிம்சையின் கோட்பாடுகளால் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சத்தியாகிரகத்தின் பிறப்பிடமான இந்த ஆசிரமம், காந்தியடிகளின் எளிமையான வாழ்க்கை முறைக்கும், அவரது புரட்சிகரமான சிந்தனைகளுக்கும் ஒரு சான்றாக விளங்குகிறது. அதிலும் இங்குள்ள மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களை சொல்லும் காந்தி ஆசிரம அருங்காட்சியகம், பழைய சுதந்திர நினைவுகளை தூண்டி, நம் தேசத்தின் வரலாற்றை ஆழமாக புரிந்து கொள்ள உதவுவதோடு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் குஜராத் மாநிலம் ஆற்றிய மகத்தான பங்கையும், எண்ணற்ற தியாகிகளின் வீரத்தையும் இது பறைசாற்றுகிறது. அதேபோல் ஆசிரமத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள அடலாஜ் ஸ்டெப்வெல், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அழகான கட்டிடக்கலை அதிசயமாகும். இங்கு நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தூண்களும், குளிர்ந்த நிலத்தடி அறைகளும் உங்களை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்லும்.


காந்தி ஆசிரம அருங்காட்சியகம் மற்றும் ஹத்திசிங் ஜெயின் கோவில்

இது தவிர அகமதாபாத்தின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் சிடி சையத் மசூதியும் ஒன்று. இங்குள்ள மரத்தின் வாழ்க்கை வடிவத்திலான ஜாலி வேலைப்பாடு, இஸ்லாமியக் கட்டிட கலையின் தலைசிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. இந்த நுட்பமான கல் வேலைப்பாடுகள் அகமதாபாத்தின் செழுமையான வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளத்தின் சின்னமாகத் திகழ்கின்றன. மேலும் மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாய் திகழும் ஹத்திசிங் ஜெயின் கோவில், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் அழகிய ஜெயின் கோவிலாகும். வெண்மையான பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், அதன் கண்கவர் சிற்ப வேலைப்பாடுகளால் பார்ப்பவர்களை ஈர்க்கிறது. இங்குள்ள ஒவ்வொரு பளிங்குச் சிற்பமும் கலைத்திறனின் உச்சத்தை வெளிப்படுத்தி நம்மை ரசிக்க வைக்கிறது. இப்படி அகிம்சை, ஆன்மிகம் என பல தலங்களுக்கு அழைத்து செல்லும் அகமதாபாத்தில் ஒரு மர்மமான இடம் ஒன்றும் உள்ளது. அது தான் வரலாற்று ஆர்வலர்களுக்கு இன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் ஜூல்டா மினார். இந்த இடம் ஒரு பொறியியல் அதிசயமாகும். காரணம் இங்கு ஒரு மினாரெட்டை மெதுவாக அசைத்தால், மற்றொன்று மர்மமான முறையில் அதிர்வுறுகிறது. இது பொறியியலாளர்களையும், வரலாற்றாசிரியர்களையும் இன்றுவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்பகுதிக்கு அருகிலேயே பல நூற்றாண்டுகளின் கதைகளைத தன்னகத்தே கொண்டு, பழமையான வாயில்கள் மற்றும் ரகசிய முற்றங்களுடன் கம்பீரமாக நிற்கும் பத்ரா கோட்டை நிச்சயம் பார்க்க வேண்டிய மற்றொரு இடமாக திகழ்கிறது.


அகமதாபாத் காங்கரியா ஏரியின் அழகிய காட்சி 

இந்த வரிசையில் அகமதாபாத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் காங்கரியா ஏரி மிக முக்கியமானது. இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக மையங்களில் ஒன்றான இந்த ஏரி, அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு படகு சவாரி செய்து மகிழலாம், மேலும் ஏரியின் நடுவில் உள்ள தீவுக்குச் செல்ல சிறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மிருகக்காட்சி சாலை, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்கா, அக்வேரியம் மற்றும் பல்வேறு விளையாட்டுகளும் இங்கு உள்ளன. குறிப்பாக இங்கு மாலை நேரங்களில் நடைபெறும் லேசர் ஷோ கண்கவர் காட்சியாகும். இதேபோல், நகரத்தின் சலசலப்பில் இருந்து விலகி, அமைதியையும் புத்துணர்வையும் தேடுபவர்களுக்கு சபர்மதி ரிவர்ஃபிரண்ட் ஒரு மிகச்சிறந்த இடமாகும். சபர்மதி ஆற்றின் கரைகளில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இடம், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்ய உகந்த பகுதியாகும். இங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் தடங்களில் சைக்கிள் ஓட்டியும் மகிழலாம். ஆற்றின் மறுகரையில் காட்சியளிக்கும் நகரத்தின் அழகிய வடிவத்தை கண்டுகளித்து, ஆற்றின் ஸ்பரிசத்தையும் ரசித்துக்கொண்டே ஓய்வெடுக்கும் தருணம் நிஜ வாழ்வின் சொர்க்கம் எனத் தோன்றும். இது இயற்கை அழகையும், நவீன நகரத்தின் நுட்பத்தையும் ஒருங்கே கொண்ட ஒரு இனிமையான அனுபவத்தை நமக்குத் தரும்.

அகமதாபாத்: உணவுப் பிரியர்களின் சொர்க்கம்


உணவுப் பிரியர்களின் சொர்க்கமான மானெக் சௌக் சந்தை 

அகமதாபாத் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மானெக் சௌக், அகமதாபாத்தின் உணவுப் பாரம்பரியத்தையும், உயிர்த்துடிப்பான இரவு வாழ்க்கையையும் ஒரே இடத்தில் அனுபவிக்க ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். இந்த இடம் ஒரு நாளைக்கு மூன்று வெவ்வேறு சந்தைகளாக மாறுகிறது. அதிகாலையில் இது ஒரு காய்கறி சந்தையாகவும், பகல் நேரங்களில் இது ஒரு பரபரப்பான நகைக் கடை சந்தையாகவும், பாரம்பரிய கைவினைக் கலைப் பொருட்களை விற்கும் இடமாகவும் காட்சியளிக்கிறது. ஆனால், இரவு நேரம் நெருங்கும்போது, மானெக் சௌக் ஒரு அற்புதமான தெருவோர உணவுப் பிரியர்களின் சொர்க்கமாக மாறிவிடுகிறது. இங்குள்ள உணவு சாவடிகள், விதவிதமான உள்ளூர் உணவு வகைகளை வழங்கி மறக்க முடியாத சுவை அனுபவத்தை நமக்கு தருகிறது. சொல்லப்போனால் மானெக் சௌக்கில்தான் அகமதாபாத்தின் உண்மையான சுவைகளை முழுமையாக அனுபவிக்கலாம். இங்கு சுவையான பாவ் பாஜி, காரமான தபேலி மற்றும் புகழ்பெற்ற சாக்லேட் சாண்ட்விச் ஆகியவற்றின் நறுமணம் காற்றில் பரவி உணவுப் பிரியர்களை மகிழ்விப்பதோடு, அவை என்றுமே மறக்கமுடியாத சுவை அனுபவத்தையும் நமக்கு தருகின்றன.

இவை தவிர, அகமதாபாத்தின் பாரம்பரிய குஜராத்தி உணவுகளான தால்-பாத், தூக்ளா, காண்ட்வி மற்றும் பாபடா ஆகியவை கட்டாயம் சுவைக்க வேண்டிய உணவுகளாகும். அதேபோல் இனிப்புப் பிரியர்களுக்கு, குல்ஃபி மற்றும் ஜிலேபி போன்ற சுவையான இனிப்பு வகைகளும் இங்கு ஏராளமாக உள்ளன. இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாக மட்டுமல்லாமல், கலை, கலாச்சாரம், உணவு மற்றும் கொண்டாட்டங்களின் மையமாகவும் திகழும் அகமதாபாத், தனது ஆழமான பாரம்பரிய வேர்களைப் பாதுகாத்துக்கொண்டு, நவீனத்துவத்தை திறம்படத் தழுவி, ஒவ்வொரு வருகையாளருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்த அனுபவத்தை நீங்களும் பெற விரும்பினால், வாய்ப்பு கிடைத்தால் திருவிழாக் காலங்களில் ஒரு முறை சென்று மகிழுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

புதிய வரவு