இந்திய தேசியக்கொடி தயாரிப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே இடம் இதுதான்!
கர்நாடகாவின் வடமேற்குப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அருகாமையில் பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஹூப்ளி வெறும் நகரம் மட்டுமல்ல.;
கர்நாடகாவின் வடமேற்குப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அருகாமையில் பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஹூப்ளி வெறும் நகரம் மட்டுமல்ல. இது கர்நாடகாவின் கல்வி, தொழில் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய மையமாகும். இதன் இரட்டை நகரமான தர்வாடுடன் இணைந்து, ஹூப்ளி-தர்வாட் கர்நாடகாவின் பெங்களூருக்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. சுமார் 404 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம், காலப்போக்கில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்திய அரசு ஹூப்ளி-தர்வாட் நகரத்தை "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தில் இணைக்க அனுமதி அளித்திருப்பதால், கடந்த சில ஆண்டுகளில் நகரத்தின் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்படி காலத்திற்கு ஏற்றாற் போல் வளர்ந்து வரும் ஹூப்ளியின் சிறப்பு, வரலாறு, சுற்றுலா இடங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
ஹூப்ளியின் வரலாறு
ஸ்மார்ட் சிட்டியாக மாறிவரும் ஹூப்ளியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி
வட கர்நாடகப் பகுதியின் 'இதயத்துடிப்பு' என்று அன்புடன் அழைக்கப்படும் ஹூப்ளி, பல நூற்றாண்டு கால செழுமையான வரலாற்றைக் கொண்ட ஒரு நகரம். பண்டைய காலத்தில் புஷ்பாவதி என்று அழைக்கப்பட்ட இந்நகரம், பின்னர் புலிபுரம், ராயனபுரா போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்பட்டது. விஜயநகரப் பேரரசு, மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷார் எனப் பலரின் ஆட்சிக் காலங்களில், ஹூப்ளி ஒரு முக்கிய வர்த்தக மற்றும் வணிக மையமாக திகழ்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்றும் இங்கு கன்னட மொழி பிரதானமாகப் பேசப்பட்டாலும், அன்றாட உரையாடல்களில் இந்தி, மராத்தி மற்றும் உருது மொழிகளின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இது பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களின் வண்ணமயமான கலவையின் விளைவாகும். மேலும், ஹூப்ளி மக்களின் சுறுசுறுப்பை போலவே, அவர்களின் கலாச்சாரமும் இன்றும் இதன் விளைவாக மிக அழகாக உயிர்ப்புடன் விளங்குகிறது. இந்தக் கலாச்சார ஒருமைப்பாட்டின் காரணமாக விநாயகர் சதுர்த்தி முதல் தீபாவளி வரை பல திருவிழாக் காலங்களில் இந்நகரம் களைகட்டுகிறது. கரகா போன்ற பாரம்பரியத் திருவிழாக்கள், பக்தி, கொண்டாட்டம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாக இப்பகுதி விளங்குகிறது.
ஹூப்ளியின் சிறப்பு
இந்தியாவின் தேசியக் கொடியை உற்பத்தி செய்வதற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலையான "கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்" ஹூப்ளியில் அமைந்திருப்பதால் தனிச்சிறப்பு பெறுகிறது. இந்திய தர நிர்ணய கழகத்தின் கடுமையான விதிமுறைகளின்படி தேசியக் கொடிகளை உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை, ஹூப்ளியின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாகும். இவ்வாறு ஹூப்ளி வெறும் பெருமைக்குரிய வரலாற்றையும் சிறப்பையும் கொண்ட நகரம் மட்டுமல்லாமல், கல்வியின் புகழ்பெற்ற மையமாகவும் திகழ்கிறது. இங்கு பல பெரிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் ஜவுளித் தொழில்கள் ஆகியவை நகரத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, மத்திய அரசின் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ், ஹூப்ளியின் உள்கட்டமைப்பு வியக்கத்தக்க வகையில் மேம்பட்டு வருகிறது. பரந்த சாலைகள், மேம்பட்ட பொதுப் போக்குவரத்து, சிறந்த பொது இடங்கள், நவீன வணிக வளாகங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல்கள் என நகரின் வசதிகள் பெருகியுள்ளன. இது ஹூப்ளியில் வசிக்கும் 14 லட்சம் மக்களுக்கு சிறந்த வேலை, வாழ்க்கை சமநிலையை வழங்குவதுடன், ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை மையமாக புதிய தொழில் வாய்ப்புகளையும் முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது.
பார்க்க வேண்டிய இடங்கள்
ஹூப்ளி நகரத்தில் பயணம் செய்வது மிகவும் எளிதானது. இங்கு சிறந்த பேருந்து சேவைகள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் செயலி அடிப்படையிலான டாக்சிகள் எனப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளன. மேலும், நகரத்திற்கு அருகில் விமான நிலையம் மற்றும் உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் ஆன ஸ்ரீ சித்தாரூட சுவாமிஜி ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. இது உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல வசதிகளை வழங்குகிறது. ஹூப்ளியின் சுற்றுலாத் தலங்களைப் பொறுத்தவரை, இங்கு காண ஏராளமான ஆன்மீக இடங்கள் உள்ளன. சுமார் 900 ஆண்டுகள் பழமையான சந்திரமௌலேஷ்வரர் கோயில் மேற்கு சாளுக்கிய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில், நான்கு முகங்களைக் கொண்ட லிங்கம் ஒரு அரிய அம்சமாகும். ஹூப்ளியிலிருந்து சற்று தொலைவில் உள்ள பனசங்கரி கோயில், பனசங்கரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஹூப்ளியில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோயில் & இந்திரா காந்தி கண்ணாடி மாளிகை
இங்கு நடைபெறும் வருடாந்திர தேரோட்டத் திருவிழா மிகவும் பிரபலமானது. உலகின் மிகப்பெரிய நவ கிரக தீர்த்தங்களில் ஒன்றான நவகிரக ஜெயின் கோயிலும் ஹூப்ளியிலிருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரமுள்ள பகவான் பார்ஸ்வநாத் மூர்த்தியின் பிரம்மாண்டமான சிலை உள்ளது. இது ஜெயின் சமூகத்தின் ஒரு முக்கிய புனிதத் தலமாகும். இவைகள் தவிர ஹூப்ளியில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலங்களில், ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இஸ்கான் கோயில் அதன் அமைதியான சூழல், அழகிய பிரார்த்தனை கூடம் மற்றும் சுவையான பிரசாதங்களுக்குப் பெயர் பெற்றது. அதேபோல், துறவி ஸ்ரீ சித்தாரூட சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்தாரூட மடம் மற்றும் சாய்நகரில் அமைந்துள்ள சாய் பாபா கோயில் ஆகியவை பக்தர்களின் வருகையால் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசிக்கும் புகழ்பெற்ற ஆன்மீக மையங்களாகும்.
இந்த ஆன்மீக தலங்கள் தவிர, ஹூப்ளியில் பல முக்கிய சுற்றுலா மையங்களும் உள்ளன. நகரத்தின் அழகிய காட்சியையும், கண்கவர் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தையும் காண நிருபதுங்கா மலைகள் ஒரு சிறந்த இடமாகும். இங்குள்ள பசுமையான சூழல் மனதை அமைதிப்படுத்தி புத்துணர்ச்சி அளிப்பதோடு, இயற்கை விரும்பிகளுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் ஏற்ற இடமாகும். 110 ஆண்டுகள் பழமையான உன்கல் ஏரியில் படகு சவாரி வசதிகளுடன் சுவாமி விவேகானந்தர் சிலை பார்ப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தரும். இது மாலை நேரப் பொழுதுபோக்குக்கும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் ஏற்ற அமைதியான இடமாகும். நகர மையத்தில் அமைந்துள்ள பசவண்ணப்பா ஷெட்டி பார்க் ஓய்வெடுக்கவும், நடக்கவும், குழந்தைகளுடன் விளையாடவும் சிறந்த பசுமையான இடமாகும். கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் நவீன கட்டிடமான இந்திரா காந்தி கண்ணாடி மாளிகை ஒரு பிரபலமான உள்ளூர் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. மேலும், ஹூப்ளியின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான அஞ்சுமானி இசை கோபுரம் மற்றும் ரயில்வே வரலாற்றையும், பாரம்பரியத்தையும் காட்சிப்படுத்தும் ஹூப்ளி ரயில்வே அருங்காட்சியகம் என எண்ணற்ற சுற்றுலா ஈர்ப்பு பகுதிகள் இங்கே ஏராளமாக உள்ளன.
வித்தியாசமான உணவு முறை
ஹூப்ளியின் ருசிக்கு பெயர்போன பில்டர் காபி மற்றும் தார்வாட் பேடா
கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் உட்கொள்ளப்படும் உணவு முறையே இங்கும் இருந்தாலும், சில தனித்துவமான தின்பண்டங்கள் ஹூப்ளியை வேறுபடுத்திக் காட்டுகின்றன. காலை வேளையில், காரசாரமான மசாலா பூரியுடன் ஒரு கப் பாரம்பரிய ஃபில்டர் காபியை அருந்துவது அருமையான தொடக்கமாக இங்கு இருக்கும். மசாலா பூரி, வழக்கமான பூரியிலிருந்து வேறுபட்டு, காரமான மசாலாப் பொருட்களுடன் பிசைந்து பொரிக்கப்படுவதால் தனித்துவமான சுவையை கொண்டுள்ளது. மேலும், ஹூப்ளியின் அடையாளமாகவே மாறிவிட்ட பன் பட்டர், இங்கு ஒரு பிரத்யேகமான காலை உணவாகும். மென்மையான பன்னை வெண்ணெய் தடவி, காரமான சட்னி மற்றும் சில சமயம் மிளகாய் தூளுடன் சேர்த்து பரிமாறுவது, எளிமையான அதே சமயம் மறக்க முடியாத சுவையை அளிக்கிறது. மதிய வேளையிலோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ, இங்குள்ள பஜ்ஜி வகைகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக, மிளகாய் பஜ்ஜி மற்றும் வெங்காய பஜ்ஜி ஆகியவற்றை காரமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது, ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும்.
மேலும் ஹூப்ளி-தர்வாட் பகுதியின் பெருமைமிக்க இனிப்புப் பண்டமான பேடாவை சாப்பிடாமல் சுற்றுலாப் பயணிகளின் பயணம் நிறைவடையாது. பால் மற்றும் சர்க்கரையால் செய்யப்படும் இந்த இனிப்பு, அதன் தனித்துவமான சுவை மற்றும் மென்மையான தன்மைக்காக உலகளவில் அறியப்படுகிறது. இதோடு, காரமான மற்றும் புளிப்பான கிர்மித் மற்றொரு பிரபலமான தின்பண்டமாகும். இது பொரி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்டு, மாலை நேர ஸ்நாக்ஸாக பரிமாறப்படுகிறது. இப்படிப் பெருமைமிக்க வரலாறு, செழுமையான கலாச்சாரம், குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ள ஹூப்ளி, கர்நாடகாவின் வட பகுதிக்கு ஒரு துடிப்பான மையமாகத் திகழ்கிறது. வாய்ப்பு கிடைத்தால், இந்த சிறப்புமிக்க நகரத்திற்கு ஒருமுறை சென்று அதன் தனித்துவமான விஷயங்களை அனுபவித்து வாருங்கள்.