மெகா பூகம்பங்களால் பேரழிவை சந்திக்கப்போகும் இந்தியா, ஜப்பான்? பயத்தை கிளப்பும் கணிப்புகள்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அழிந்து சேதமாகின. இதன் பாதிப்பு தாய்லாந்திலும் காணப்பட்டது. இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் மியான்மருக்கு உதவ முன்வந்தன. இப்படி ஏதேனும் ஒரு நாட்டுக்கு இயற்கை சீற்றங்களால் பிரச்சினை வந்தால் மற்ற நாடுகள் உதவ முன்வரும். ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் இயற்கை தனது அழிவை காட்டினால் என்னவாகும்? என்ற கேள்விதான் இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. காரணம் கடந்த ஒருசில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஏதோ ஒரு இடத்தில் அல்ல; அமெரிக்கா, பாகிஸ்தான், கிரீஸ், நேபாளம், ஆப்கானிஸ்தான் என உலகில் பல நாடுகளில் பல இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களும் அச்சமூட்டும் பாதிப்பற்ற நிலநடுக்கங்களும் ஏற்பட்டு உலக மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கின்றன. குறிப்பாக, ஜப்பான் மற்றும் இந்தியா நிலநடுக்கத்தால் மிகப்பெரிய அழிவை சந்திக்கப்போவதாக வெளியாகும் செய்திகள் பயத்தை கொடுக்கின்றன. ஒருவேளை இது நடந்தால் நமது நாட்டின் நிலைமை என்னவாகும்? பார்க்கலாம்.
கடந்த மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள்
உலக நாடுகளை உலுக்கிய மியான்மர் நிலநடுக்கம்
இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தை யாராலும் மறக்கமுடியாது. இதில் கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்தனர். 2500க்கும் அதிகமானோருக்கு காயங்கள் ஏற்பட்டன. 1500க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 7.7 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்படைந்தனர். இதன் தாக்கம் அண்டை நாடுகளான சீனா மற்றும் தாய்லாந்திலும் காணப்பட்டது. குறிப்பாக, தாய்லாந்தில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கினர். அதில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 300 அணுகுண்டு வீச்சுகளுக்கு நிகரானது என நிபுணர்கள் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டின. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அடங்குவதற்கு உள்ளாகவே மற்ற நாடுகளிலும் இதுபோன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கணித்துவருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கணித்திருக்கிறார்.
திபெத் தென்முனை அடியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்தியா 2 மீட்டருக்கு உள்நோக்கி சரிகிறது - ஆராய்ச்சியாளர் ரோஜர்
இமயமலையில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறதா?
நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிற பகுதிகள் மற்றும் புவியியல் தகவமைப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்கிற பிரபல ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ரோஜர் பில்ஹாம் என்பவர் வட இந்தியாவின் இமயமலைப்பகுதியில் 8 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மக்கள் தொகை குறைவாக இருக்கிற நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டாலே அதன் பாதிப்புகளும் தாக்கங்களும் மிகவும் அதிகமாக இருக்கும். அப்படியிருக்கையில் மக்கள்தொகை செறிவுமிக்க இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் விளைவுகளும் மற்ற நாடுகளைவிட மிகமிக மோசமாக இருக்கும் என்பதாலேயே ரோஜரின் இந்த கணிப்பானது மற்ற உலக நாடுகளிடையே பேசுபொருளாகியிருக்கிறது. ஏற்கனவே மியான்மர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ரிக்டர் அளவில் 5.9 என பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் காஷ்மீர் மற்றும் டெல்லி வரைக்கும் உணரப்பட்டது. இதனால் சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும் நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். அதனையடுத்து துருக்கியிலும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ரிக்டர் அளவில் 6.2 என நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் இந்த நிலநடுக்கத்தால் குலுங்கியது. மே மாதம் 2ஆம் தேதி அர்ஜெண்டினாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சிலி பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த ஒருசில நாட்களில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் அதிர்வு பதிவாகி பயத்தை கிளப்பியது. அதிர்ஷ்டவசமாக இதனால் பாதிப்பு ஏதும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் குவெட்டா நகரில் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. இப்படி இந்தியாவை சுற்றியுள்ள மற்ற நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கத்தை வைத்து பார்க்கும்போது இங்கு எப்போது வேண்டுமானாலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் ஆராய்ச்சியாளர் ரோஜர் இதுகுறித்து கூறுகையில், திபெத் தென்முனை அடியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்தியா 2 மீட்டருக்கு உள்நோக்கி சரிவதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக அடுத்த 70 ஆண்டுகளில் இது நடக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இமயமலைப் பகுதியில் இப்படியொரு நிலநடுக்கம் ஏற்பட்டால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உட்பட வடகிழக்கு இந்தியா முழுவதும் கடுமையான சேதத்தை சந்திக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஜப்பான் - பிலிப்பைன்ஸ் இடையேயான கடல் பகுதியில் வரும் ஜூலையில் மிகப்பெரிய சுனாமி ஏற்படலாம் எனக் கணிப்பு
அச்சத்தில் ஜப்பான்!
இந்தியாவிற்கு முன்பே ஜப்பான் குறித்தும் இதேபோன்று ஒரு கணிப்பு வெளியாகி அங்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக அங்குள்ள மக்கள் பெரும் பதற்றத்தை சந்தித்து வருகிறார்கள். அங்குள்ள மக்கள் மட்டுமல்ல; மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஜப்பானை கவனிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கு அந்நாட்டைச் சேர்ந்த காமிக்ஸ் கலைஞரான ரியோ டட்சுகி காரணம் என்கின்றனர். இவர் ஜப்பானின் பாபா வாங்கா என்று அழைக்கப்படுகிறார். மங்கா ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லப்படுகிற ரியோ, மிகப்பெரிய சுனாமி ஜப்பானைத் தாக்கும் என்று தெரிவித்திருப்பதுதான் இப்போது அங்கு பேசுபொருளாகியிருக்கிறது. ஏனென்றால் 1999ஆம் ஆண்டு The Future I Saw என்ற புத்தகத்தை வடிவமைத்த இவர், அதில் சுனாமி குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அடுத்த சில ஆண்டுகளில் அது அப்படியே நடந்தது. தற்போது இந்த புத்தகத்தின் அடுத்த பதிப்பை வெளியிட்டிருக்கும் இவர், ஜப்பான் - பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையேயான கடல் பகுதியில் மிகப்பெரிய சுனாமி வருகிற ஜூலை மாதத்தில் வரக்கூடும் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, கடலுக்குள் இருக்கிற எரிமலைகள் வெடிக்கும் என்றும், நிலநடுக்க பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த பதிப்புக்கு பிறகு ஆசிய நாடுகளில் சுற்றுலாவிற்கு பெயர்போன ஜப்பானிற்கு செல்ல மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் பயப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணத்தை பலர் ரத்து செய்திருக்கின்றனர். இதனால் ஜப்பானின் சுற்றுலாத்துறை மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இமயமலைப் பகுதியல் நிலநடுக்கம் ஏற்பட்டால் வடகிழக்கு இந்தியா முழுவதும் கடுமையான சேதத்தை சந்திக்கும் - ரோஜர்
நிலநடுக்கத்தின் தாக்கத்தை தடுக்க என்ன செய்யவேண்டும்?
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்பட்டால் கட்டிடங்களுக்குள் இருக்காமல் திறந்தவெளிக்கு ஓடிவர வேண்டும் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அதற்கு காரணம், பூமி அதிர்வுகளால் கட்டிடங்கள் சரிந்து விழும்போது அந்த இடிபாடுகளில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளே இதுவரை அதிகமாக பதிவாகி இருக்கின்றன. இதை தவிர்க்க, கட்டிடங்களை கட்டும்போதே நிலநடுக்க தடுப்பு கட்டுமான விதிகளை பின்பற்றுவது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றினாலே நிலநடுக்கம் போன்ற கடினமான சூழ்நிலைகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்கலாம் என்று சொல்கின்றனர் நிபுணர்கள்.