65 படங்கள் நடித்துவிட்டேனா! நான் கணக்கு பண்ணவே இல்ல! - நடிகர் அருள்தாஸ்

Update:2025-06-17 00:00 IST
Click the Play button to listen to article

நடிகர்களில் ஒரு சிலரைதான் எல்லாருக்குமே பிடிக்கும். வில்லனாக நடித்தாலும் சரி, குணச்சித்திர கதாபாத்திரம் செய்தாலும் சரி, சாதாரணமாக கெஸ்ட் ரோலில் வந்துவிட்டு சென்றாலும் சரி, நம் மனதை சில நடிகர்கள்தான் ஈர்த்துவிடுவார்கள். அப்பப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் அருள்தாஸ். "நான் மகான் அல்ல" திரைப்படத்தில் தனது நடிப்பை தொடங்கிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், சியான் விக்ரம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் பணியாற்றிவிட்டார். சுமார் 65 படங்களில் நடித்துள்ள அருள்தாஸ் அணுகுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறார். அவர் ராணி ஆன்லைன் நேயர்களுக்கு அளித்த நேர்காணலை தற்போது பார்ப்போம்.  

நீங்கள் நடிகரானது எப்படி?

எனக்கு சிறுயதிலிருந்தே ஒளிப்பதிவின் மீதுதான் விருப்பம். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு நான் நிறைய திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன். வாரத்திற்கு இரண்டு மூன்று படங்களை கண்டிப்பாக பார்த்துவிடுவேன். அதனால் கேமராவின் மீது அதிக கவனம் செலுத்தி கூர்ந்து கவனிப்பேன். எனக்கு டைரக்‌ஷன் பக்கமோ, நடிப்பிலோ விருப்பம் இருந்ததில்லை. ஒரு நல்ல ஒளிப்பதிவிற்கு அடிப்படை தேவை புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெறவேண்டும் என உணர்ந்து கொண்டேன். புகைப்பட கலைஞனானேன். அதன் பிறகு சினிமாத்துறையில் துணை ஒளிப்பதிவாளராக இணைந்து ஒளிப்பதிவாளராகி, தற்போது உங்கள் முன் ஒரு நடிகனாக உள்ளேன்.


மகாராஜா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன்

"நான் மகன் அல்ல" படத்தில் அந்த கதாபாத்திரமாகவே எப்படி வாழ்ந்து நடித்தீர்கள்?

எனக்கு அந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு கிடைத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அந்த குறிப்பிட்ட கதாபாத்திரம், முதலில் வில்லன்போல எதிர்மறை கதாபாத்திரமாக தோன்றி இறுதியில் நேர்மறை கதாபாத்திரமாக முடியும். ஹீரோவுக்காக சாகும் கதாபாத்திரம்தான் அது. இதனால்தான் அந்த கதாபாத்திரம் மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்தது. எனக்கு பெரிய வரவேற்பை அந்த கதாபாத்திரம் பெற்றுத்தந்தது.

நடிகர் விஜய் சேதுபதி உங்களது நெருங்கிய நண்பராமே! "தென்மேற்கு பருவக்காற்று" திரைப்படத்தில் அவருடனான உங்கள் அனுபவம் எப்படி?

நீங்கள் சொல்வது உண்மைதான். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய தம்பி போன்றவர். அவரது முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமாகிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் தொடங்கி இன்றுவரை திரைத்துறையில் அவரது வளர்ச்சி என்பது மிகப்பெரிய வளர்ச்சியாக உள்ளது. நான் அவருடன் கடைசியாக மகாராஜா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அவர் அற்புதமான திரைவளர்ச்சியை கண்டிருந்தாலும் கூட, அன்று முதல் இன்றுவரை என்னிடம் "அண்ணே "என்று பேரன்புடன் பழகக்கூடிய நல்ல மனிதர்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விக்ரமுடன் நடித்த திரை அனுபவம் எப்படி இருந்தது?

பெரிய நடிகர்களுடன் நாம் நடிக்கும்போது எல்லோருக்குமே ஒருவித பய உணர்வு இருக்கும். ஆனால் பெரிய நடிகர்கள் எல்லோருமே தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களின் உணர்வை புரிந்துகொண்டு அந்த பய உணர்வை நீக்கி அவர்களுடன் நடிப்பதை எளிதாக்கிவிடுவார்கள். அதுபோன்றுதான் நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்கும்போது அவர்கள் என் தயக்கத்தை போக்கிவிட்டார்கள். அவர்களுடன் இயல்பாக நடிக்க வைத்தார்கள்.


நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விக்ரமுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்த நடிகர் அருள்தாஸ்

65 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டீர்கள்... வில்லன் ரோல் என்பது நீங்களாக ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்டு நடிப்பதா?

நான் மகான் அல்ல திரைப்படம்தான் என்னை நடிகனாக அடையாளம் காட்டியது. எனக்கு இன்னும் நிறைய படங்களில் தொடர்ந்து நிறைய கேரக்டர் ரோல்களில் நடிக்கவேண்டும் என்பதே ஆசை. நெகடிவ் கேரக்டர்கள் மற்றும் வில்லனாக மட்டுமே நடித்துக்கொண்டிருந்தால் அதிக நாட்கள் காலம் கடத்த முடியாது. ஒரு அண்ணனாக, அப்பாவாக, சகோதரனாக இப்படி பல கேரக்டர்களில் நடிக்க வேண்டும். வில்லன் கதாபாத்திரம் என்பது நானாக விரும்பி வாங்கியது இல்லை. கதையின்படி உள்ள கதாபாத்திரம் மற்றும் அதில் உள்ள சீன்களை மட்டுமே என்னிடம் விவரித்து சொல்லுவார்கள். எனக்கு அந்த கதாபாத்திரம் ஒத்துவரும் பட்சத்தில் மட்டுமே நான் நடிப்பேன். அப்படி இல்லையன்றால் நான் மறுத்துவிடுவேன்.

சினிமாக்களில் பயன்படுத்தப்படும் கத்தி போன்ற ஆயுதங்கள் பார்க்க நிஜம் போன்றே இருக்கிறதே?

நிஜமான கத்தியை பயன்படுத்தினால் நாம் ஜெயிலுக்குத்தான் செல்லவேண்டும். சினிமாக்களில் பயன்படுத்தப்படும் கத்திகள் எல்லாமே டம்மிக்கள்தான். அவையெல்லாமே அட்டையால் ஆனவை. பார்ப்பதற்கு நிஜமான கத்திகளை போன்றே தோற்றமளிக்கும். மெல்லிய பிளைவுட்களில் அவை தயாரிக்கப்படுகின்றன. இதில்தான் ஆர்ட் டைரக்டர்களின் திறமை முழுவதும் அடங்கியுள்ளது. டைரக்டர்களின் விருப்பத்திற்கேற்ப ஆர்ட் டைரக்டர்கள் இதனை செய்து தருவார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் உங்களால் மறக்கமுடியாத நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

அப்படி ஏதும் இல்லை.


நான் மகான் அல்ல திரைப்படக்காட்சி

உங்களுக்கு மிகவும் பிடித்த உங்களுடன் நடித்த நடிகர்கள் யார்?

எனக்கு என்னுடன் நடித்த சக நடிக நடிகையர் என எல்லோரையுமே பிடிக்கும். அதுவும் எல்லோருமே திறமை மிக்கவர்கள்தான். எல்லோருமே என் மனதிற்கு நெருக்கமானவர்கள்தான். சொல்வதை உள்வாங்கி கொண்டு நடிக்கவேண்டும், அப்படி செய்தால் மட்டுமே சினிமாத்துறையில் நீடித்து நிலைக்கமுடியும்.

வில்லன் நடிகராக நடிக்கவேண்டும் என்று விரும்புவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

ஆலோசனை சொல்லுமளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. நான் ஒரு சாதாரண ஆள்தான். வில்லன் நடிகர்கள் என்று மட்டும் கிடையாது, நடிப்புத்துறைக்கு வரும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த சினிமாத் துறையை உண்மையாகவே நேசித்து நடிக்கும்போது மட்டுமே அது அவர்களை கைவிடாதிருக்கும் என்பதே நிதர்சனம். இதை நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கின்றேன். சினிமாத்துறையை மட்டுமல்லாது அது எந்த துறையாக இருந்தாலும்சரி, அதில் முழு உண்மையோடும் அந்த தொழிலை ஏமாற்றாமலும் நேர்மையாக இருந்து நீங்கள் உழைத்தால் இன்றைக்கு இல்லாவிட்டாலும் கூட வேறொரு நாள் நிச்சயம் வாழ்க்கையில் அதற்குரிய பலனைத் தந்து கை கொடுத்துவிடும்.

சினிமாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லி நடிகைகள் யார்?

சினிமாவில் தற்போது வில்லிகள் குறைந்துவிட்டார்கள். ஆரம்பகால "பிளாக் அண்ட் ஒயிட்" திரைப்படங்களில் வில்லிகளுக்கென்றே தனியாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவார்கள். மாமியார் கேரக்டர் போன்றவை. தற்போது இவைகள் எல்லாம் டிவி சீரியல்களுக்கு மாறிவிட்டன. டிவி சீரியல்களில் இதுபோன்று நிறைய வில்லி கேரக்டர்கள் அதிகமாக காணப்படுகின்றது. மாமியார், நாத்தனார் போன்ற கேரக்டர்கள் தற்போது தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டன. வில்லியாக நடிக்கக்கூடிய பெண்கள் கதாபாத்திரம் சினிமாவில் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

Tags:    

மேலும் செய்திகள்