கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் வரிசையில் தோனி! ஹால் ஆஃப் ஃபேம் கௌரவம்!
கிரிக்கெட் விளையாட்டுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் "ஹால் ஆஃப் ஃபேம்" என்கிற அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் உலகளவில் ஏற்கனவே 115 பேர் உள்ள நிலையில், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தோனி. இதனால் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வரிசையில் தோனியும் இணைந்துள்ளார். தோனிக்கு ஏன் இந்த கொளரவம் வழங்கப்பட்டது? என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் முதலில் இடம்பிடித்த கவாஸ்கர், அடுத்ததாக இடம்பிடித்த கபில் தேவ்
"ஹால் ஆஃப் ஃபேம்" என்றால் என்ன?
ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்புடன் இணைந்து, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில், இந்த அங்கீகாரத்தை ஐசிசி வழங்குகிறது. ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு, ஹால் ஆஃப் ஃபேம் தொப்பி ஒன்று வழங்கப்படுகிறது. அவ்வாறு இந்த பட்டியலில் சேர்க்கப்படும் வீரர், அறிவிப்பு வெளியாகும்போது உயிருடன் இல்லையென்றால், அவர்களின் குடும்பத்தாரிடம் தொப்பி வழங்கப்படும்.
2025-ஆம் ஆண்டு ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
"ஹால் ஆஃப் ஃபேம்" அடிப்படை தகுதி என்ன?
கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து சாதனை படைத்துள்ளதுடன், அந்த வீரர் அல்லது வீராங்கனையின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டி, 5 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்பது இந்த அங்கீகாரத்திற்கான தகுதியாக உள்ளது. இந்த தகுதிகளுடன் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் ஏற்கனவே 115 பேர் உள்ள நிலையில், இந்த ஆண்டு புதிதாக 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை இந்தப் பட்டியலில் 122 கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
2025 பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் யார்யார்?
இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்களான ஹசிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்து முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி, இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை சாரா டெய்லர், பாகிஸ்தான் முன்னாள் வீராங்கனை சனாமிர் ஆகியோர் 2025-ஆம் ஆண்டு ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்கள்
இது குறித்து பேசிய ஐசிசி தலைவர் ஜெய்ஷா, கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை காத்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களை, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் மூலம் கௌரவிப்பதாக தெரிவித்தார். இந்தாண்டு, சிறந்த ௭ நபர்களை இந்த மதிப்புமிக்க பட்டியலில் சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். இந்தாண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் ஐசிசி சார்பாக, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
"ஹால் ஆஃப் ஃபேம்" பட்டியலில் உள்ள இந்தியர்கள்!
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்ட ஆண்டான 2009-ல் சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடியின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 2010-ஆம் ஆண்டு கபில் தேவின் பெயர் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றது. 2015-ஆம் ஆண்டு அனில் கும்ப்ளேவின் பெயரும், 2018-ல் ராகுல் டிராவிட்டின் பெயரும், 2019-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் பெயரும் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2021-ல் வினோ மன்காட், 2023-ல் வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றன. இந்த வரிசையில் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்துள்ள 11-வது இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி. இவர்களை தவிர்த்து, டயானா எடுல்ஜி, நீது டேவிட் ஆகிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்களும் பட்டியில் இடம்பெற்றுள்ளன.
2013-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது
தோனிக்கு கௌரவம்!
கடந்த 2004-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார் எம்.எஸ்.தோனி. 2007-ஆம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனி, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். 2011-ல் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்றது.
மேலும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி, 4 ஆயிரத்து 876 ரன்களை எடுத்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 10 ஆயிரத்து 773 ரன்களை குவித்துள்ளார். தோனியின் பேட்டிங் சராசரி 50.57. 10 சதம் மற்றும் 73 அரை சதங்களை தோனி பதிவு செய்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் வரலாற்றில், 3 ஐசிசி வெள்ளை பந்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தல தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தகுதி அடிப்படையில், தோனியை பொறுத்தவரை, அவர் கடைசியாக கடந்த 2019-ல் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். 2019 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம்தான் தோனி கடைசியாக விளையாடிய போட்டி. 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கூல் கேப்டல் தோனி.
3 ஐசிசி வெள்ளை பந்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி
ஏன் தோனிக்கு? - ஐசிசி அறிக்கை
ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் தோனி சேர்க்கப்பட்டது குறித்து ஐசிசி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கிரிக்கெட் மைதானத்தில் கடினமான அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புக்கு எடுத்துக்காட்டு தோனி. அசாத்திய கிரிக்கெட் திறமையுடனும், எதிர்கால வீரர்களுக்கு உந்து சக்தியாகவும் தோனி விளங்குகிறார். ஒரு வீரருக்கான சகல குணநலன்களிலும் முன்னோடியாக அவர் கொண்டாடப்படுகிறார். கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராகவும், கூல் கேப்டனாகவும், அதிரடி விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனி மகிழ்ச்சி!
ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பேசிய தோனி, தலைமுறைகளைக் கடந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐசிசி-யின் இந்த ஹால் ஆஃப் ஃபேம் குழுவில் எனது பெயரும் இடப்பெற்றுள்ளது மிகப்பெரிய கௌரவமாக உள்ளதாக கூறினார். வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் என் பெயரும் நினைவுகூரப்படும் என்பது ஒரு அற்புதமான உணர்வு என்றும் தோனி குறிப்பிட்டார்.