3 சிசேரியன்களுக்கு பிறகு பளு தூக்குதலில் பதக்கம் வென்ற பெட்ரோல் பங்க் பெண் ஊழியர்!

Update:2025-06-24 00:00 IST
Click the Play button to listen to article

பொதுவாகவே இந்த வேலையை ஆண்தான் செய்ய வேண்டும், இதை பெண்தான் செய்ய வேண்டும் என்ற பேச்சு தற்போதைய காலக்கட்டத்திலும் உள்ளது. கல்வி, வேலை, திருமணம் என ஒரு பெண்ணின் வாழ்வில் அடங்கும் அனைத்து முக்கியமான முடிவுகளும் தற்போதுவரை பெற்றோர்களாலே, குறிப்பாக தந்தையர்களாலே எடுக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கால் தடம் பதித்து வருகின்றனர். ஆனால் இதுவும் சிலருக்கு குறிப்பிட்ட காலம் வரையே நீடிக்கிறது. திருமணம், குழந்தைப்பேறு என சென்றுவிட்டால் அத்துடன் சாதனை வாழ்க்கை ஊற்றி மூடப்படுகிறது. ஆனால் சில பெண்கள்தான் குடும்பத்தின் ஆதரவோடு, தான் தேர்ந்தெடுத்த துறையில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவரை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். 


வறுமையை தாண்டி பளு தூக்குதல் விளையாட்டில் சாதிக்கும் ஜெயஸ்ரீ

விளையாட்டுத்துறையில் எத்தனை விளையாட்டுகள் இருந்தாலும் பளு தூக்குதல் என்பது மிகவும் கடினமான ஒன்று. உடல் பலம் கொண்ட ஆண்களே பளு தூக்குதலில் திணறும்போது, அதில் ஈடுபடும் பெண்களின் சிரமம் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ உள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 320 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமையையும் தேடி தந்துள்ளார். 

யார் இந்த ஜெய்ஸ்ரீ?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் தனது இரண்டு பிள்ளைகள், கணவர் என குடும்பத்துடன் வசித்து வருகிறார் 39 வயதாகும் ஜெயஸ்ரீ. சிறுவயதிலேயே பளு தூக்குதலில் ஆர்வம் கொண்ட இவர், தனது பள்ளிப் பருவத்திலேயே தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2002-ம் ஆண்டிலேயே 190 கிலோ வரை தூக்கி வந்துள்ளார். ஆனால் வீட்டில், ஆண் பிள்ளைகளின் விளையாட்டு பெண் பிள்ளைக்கு எதற்கு? என விளையாட்டை நிறுத்தியுள்ளனர். மேலும் அவர் வாங்கிய பதக்கங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் வீட்டின் மேல் உள்ள பரணையில் தூக்கிப் போட்டுள்ளனர். காரணம் அதை யாராவது பார்த்தால், பளு தூக்குதலில் இருப்பவர்களுக்கு குழந்தை பிறக்காது எனக்கூறி திருமணம் செய்துகொள்ள முன்வரமாட்டார்கள் என்ற அச்சமாம். 


பளு தூக்குதலில் ஒருபுறம் சாதனை - மறுபுறம் பெட்ரோல் பங்கில் வேலை

கனவுக்கு உறுதுணையாக இருந்த கணவர்... 

தனது 19 வயதில் குடும்ப சம்மத்ததோடு காதல் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயஸ்ரீ. பின்னர் ஜெயஸ்ரீயின் தந்தை இறந்துள்ளார். அப்போது வீட்டை சுத்தம் செய்யும்போது இவரின் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் அவரது கணவர் பார்த்துள்ளார். உடனே வந்து மீண்டும் விளையாடுகிறாயா என தனது மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆன மூன்று பிரசவங்களும் அறுவை சிகிச்சை மூலமே நடைபெற்றுள்ளது. எனவே பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டால், உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடும் என ஜெயஸ்ரீயின் அம்மா கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஜெயஸ்ரீயின் கணவர், என் மனைவியை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி  பளு தூக்குதல் பயிற்சியில் ஜெயஸ்ரீயை சேர்த்துள்ளார்.  

100 கிராம் எடையால் தவறிய முதல் பதக்கம்...

20 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், 35 வயதில் ஒருவித பதட்டத்துடன் இருந்துள்ளார் ஜெயஸ்ரீ. ஆனாலும் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.  அவ்வாறு 20 வயது பெண்ணுக்கு எதிரான போட்டியில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் பதக்கத்தை தவறவிட்டுள்ளார். 


தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஜெயஸ்ரீ பதக்கம் வென்ற தருணம்

ஜிம் முதலாளி... ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர்... 

பளு தூக்குதலில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் ஜெயஸ்ரீயே சொந்தமாக ஜிம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஜிம்மிற்கு உரிமையாளராக இருந்தாலும், பெட்ரோல் பங்கிலும் பணியாற்றி வந்துள்ளார். ஜிம் பொருட்கள் அனைத்தும் கடனிலேயே வாங்கியுள்ளதாகவும், மேலும் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகவும் பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு செல்கிறாராம். காலை 4 மணிக்கு ஜிம், 7 மணிக்கு குழந்தைகளை பள்ளிக்கு கிளப்புதல் என தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். இதில் இடையில் இருக்கும் நேரத்தை வீணாக்காமல் வேலைக்கு செல்கிறார். கணவர் ஜிம்மிற்கு உறுதுணையாக இருக்கிறார். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கிறாராம். 

வறுமையை தாண்ட மனதைரியம்... 

வறுமைக்காக முதலில் வேலைக்கு செல்லவில்லை. காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டதால், இவ எப்படி வாழப்போறா எனக்கூறியவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற மனதைரியம்தான் இதற்கெல்லாம் காரணம் எனக் கூறியுள்ளார் ஜெயஸ்ரீ. அதனால் வறுமை தனக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை எனவும் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். தான் இதுவரை உதவி என யாரிடமும் சென்று நின்றதில்லை எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 


பளு தூக்குதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த ஜெயஸ்ரீ

24 மணிநேரமும் இணைந்தே இருப்போம்...

"கடந்த ஆறு மாதமாகத்தான் பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு செல்கிறேன். அதற்குமுன் தறி வேலைக்குதான் அதிகமாக செல்வேன். அப்போது நானும், என் கணவரும் இணைந்துதான் வேலைக்கு செல்வோம். 24 மணிநேரமும் ஒன்றாக பார்க்ககூடிய ஜோடி என்றால் நாங்கள்தான். எங்கு சென்றாலும் என்னைவிட்டு அவர் செல்லமாட்டார், அவரைவிட்டு நான் செல்லமாட்டேன். இடையில் என்னால் கொஞ்ச நாட்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. அப்போது நீ போகவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறினார். அப்போதுதான் ஜிம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. நான் இதற்கென தனியாக எந்த உணவும் சாப்பிட மாட்டேன். வீட்டில் என்ன இருக்கிறதோ அதைத்தான் சாப்பிடுவேன்" என நேர்காணல் ஒன்றில் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். 

பளு தூக்குதலில் எந்த வருமானமும் வராது... 

பளு தூக்குதல் போட்டியில் இருந்து எந்த வருமானமும் வராது. தறி ஓட்டினால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் கிடைக்கும். பெட்ரோல் பங்கில் மாதம் ரூ. 12 ஆயிரம் சம்பளம். இதில் விளையாட காரணம் என்னைப் போன்று சில பெண்கள் இதைப்பார்த்து வெளியில் வருவார்கள். சிலருக்கு விளையாட்டு மூலம் அரசுப்பணி கிடைக்கும் என ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கு தங்கப்பதக்கம்...

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட ஜெயஸ்ரீ, 320 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு அதில் முதலிடமும் பிடித்தார். முதலிடம் பிடித்த ஜெயஸ்ரீக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. ஜெயஸ்ரீ தங்கப்பதக்கம் வென்றது, தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்திற்குமே சொந்தமானது. 

Tags:    

மேலும் செய்திகள்